இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Thursday
மாற்றம் விரும்பிய மக்களுக்கு ஏமாற்றம் கொடுத்த ஜெயா
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
கருணாநிதி,
ஜெயலலிதா,
வைகோ
எழுதிய நேரம்
Thursday, May 10, 2012
18 ஆம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும் ம.தி.மு.க-வின் கொடியை வைகோ ஏற்றிய ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சந்திப்பு இது...
''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து மே 13-ம் தேதியுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. இந்த ஓர் ஆண்டு காலத்தை எப்படி மதிப்பிடுவீர்கள்?''
''மாற்றம் விரும்பிய மக்களுக்கு ஏமாற்றத்தையே ஜெயலலிதா தந்து இருக்கிறார்
என்று, அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாவது மாதமே சொன்னேன். 'ஜெயலலிதா
திருந்திவிட்டார்’ என்று சொல்லி வாக்குக் கேட்டவர்கள் அத்தனை பேர்
முகத்திலும் கரியைப் பூசிவிட்டார் ஜெயலலிதா.
பால் விலையை
ஏற்றிவிட்டார். பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டார். மின்சாரம் கொடுக்கத்
திட்டமிடாமல் மின் கட்டணத்தை மட்டும் எகிறவைத்துவிட்டார். மளிகைப்
பொருட்கள் அனைத்தின் விலையும் ஏறிவிட்டன. யாரெல்லாம் ஜெயலலிதாவை
ஆட்சிக்குக் கொண்டுவர வாக்குஅளித்தார்களோ, அவர்கள் அனைவரின் பாக்கெட்டில்
இருந்தும் பணத்தைப் பகிரங்கமாக அரசாங்கம் எடுத்துவிட்டது. ஏழை, நடுத்தர
மக்கள் இதுபற்றிக் கோபப்படுவார்களே என்கிற பயமே ஜெயலலிதாவுக்கு இல்லை.
'இவ்வளவு கட்டணத்தை உயர்த்தியதற்குப் பிறகும் நான்தான் சங்கரன்கோவிலில்
வெற்றி பெறுவேன்’ என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் பகிரங்கமாகச் சொன்னார்.
பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற மமதைதான் இதற்குக் காரணம்.
திருமங்கலம் ஃபார்முலாவைக் கண்டுபிடித்த கருணாநிதியின் பண பலம்தான் அவரை
பாதாளத் துக்குத் தள்ளிவிட்டது என்பதை ஜெயலலிதா உணர வேண்டும்.''
'' 'நான் என்ன தவறு செய்வேன் என்று எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் காத்திருக்கின்றன’ என்கிறாரே ஜெயலலிதா?''
''பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பெயரால் அமைந்த நூற்றாண்டு நூலகத்தை
முடக்க நினைத்தது சரியா? செம்மொழி நூலகத்தைப் பகிரங்கமாகவே
அப்புறப்படுத்தியதை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்? சமச்சீர்க் கல்வியை
முடக்குவதற்காக எத்தனை வக்கீல்களை வைத்து ஜெயலலிதா வாதாடினார்?
தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்திருக்குமானால், கடந்த ஆட்சி மீது
விசாரணை நடத்தலாம். அதற்காக மக்களின் வரிப் பணத்தால் கட்டப்பட்ட
கோடிக்கணக்கான மதிப்பிலான கட்டடத்தை கவனிப்பார் இல்லாமல் போடு வேன் என்பது
பாசிச அணுகுமுறை. கடந்த ஆட்சி செய்ததை எல்லாம் மாற்றுவேன் என்று அடுத்து
வரும் ஆட்சி முடிவு எடுக்குமானால், ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தும்
கேலிக்குரியவையாகி சவக்குழிக்குள் தள்ளப்படும்.''
''ஓர் ஆண்டு காலத்தில் நல்லதே நடக்கவில்லை என்கிறீர்களா?''
''பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்’
என்று தமிழ்நாட்டு மக்களின் மன உணர்வை வெளிப்படுத்தியது
பாராட்டத்தகுந்தது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு சதி
செய்ததும், அதற்கு மத்திய காங்கிரஸ் அரசு வாய் மூடி மௌனியாக இருந்தபோது,
அறிக்கை வெளியிட்டு தமிழ்நாட்டு உரிமைக்காக ஜெயலலிதா நின்றதை வரவேற்கிறோம்.
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் என்கிற பெயரால் மாநிலத்தின் உரிமைகள்
பறிக்கப்படுகிறபோது, தைரியமாக அதனை எதிர்த்து உறுதியாக ஜெயலலிதா நிற்பது
கவனிக்கத் தக்கது.''
''இந்த ஓர் ஆண்டு காலப் படிப்பினைகளின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு நீங்கள் ஆலோசனை ஏதேனும் சொல்ல முடியுமா?''
''மூன்று விஷயங்களை ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.
ஜெயலலிதாவின் அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும். அரசியல்தலைவர் களால்,
மக்கள் பிரதிநிதிகளால், பாதிக்கப் பட்ட மக்களால் எளிதில் பார்க்க முடியாத
மனிதராக அவர் இருக்கிறார். இப்படி நடந்துகொள்வது மன்னர் ஆட்சிக் காலத் தின்
எச்சம். தெருத் தெருவாகச் சென்று மக்களிடம் ஓட்டு போடுங்கள் என்று கேட்டு
வாக்கு வாங்கும் மக்கள் ஆட்சிக் காலத்தில், அனைத்துத் தலைவர்களும்
மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். சட்டீஸ்கர் மாநிலத்தைச்
சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தப் பட்டபோது தமிழகத்தின்
எத்தனையோ குடும்பங்கள் அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று
பிரார்த்தித்தன. அலெக்ஸின் அப்பாவும் அலெக்ஸ் மனைவியின் அப்பா வும் தலைமைச்
செயலகத்துக்குச் சென்று முதல்வரைப் பார்க்க வேண்டும் என்று அனுமதி
கேட்டபோது கிடைக்கவில்லை. அவர்களை தமிழக முதல்வர் சந்திப்பது என்பது,
அந்தக் குடும்பத்தின் பின்னால் மொத்தத் தமிழ்நாடும் இருக்கிறது என்பதை
உணர்த்தும் ஒரு சமிக்ஞை. அதன் பிறகு, பிரதமருக்குக் கடிதம் எழுதினார்
முதல்வர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களை அந்தச் சூழ்நிலையில் சந்திப்பதால்,
அப்பாயின் மென்ட் இல்லாமலேயே அவர்களைப் பார்க்க அனுமதிப்பதால் முதல்வர்
குறைந்து விட மாட்டார். அவருடைய செல்வாக்கு உயரத்தான் செய்யும்.
இரண்டாவது... தமிழ்நாடு முழுவதும் கண்மாய், குளங்களில் மணல் கொள்ளை
பகிரங்கமாக ஆளும் கட்சியினரின் ஆசீர்வாதத்துடன் பலமாக நடக்கிறது. ஆளும்
கட்சியினருக்கு இன்று வருவாய் ஈட்டும் முக்கியமான தொழில்... மணல்
திருட்டுதான். பிரதான ஆற்றுப் படுகைகள் மட்டும் அல்லாமல், சிற்றாறுகள்,
காட்டாறுகளைத் தேடிக் கண்டுபிடித்து மணல் அள்ளுகிறார்கள். தமிழ்நாட்டின்
வளத்தை பட்டப் பகலில் சுரண்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதைத்
தடுக்காவிட்டால், தமிழகமே பாலைவனமாகிவிடும்.
மூன்றாவது... சாராயக்
கடைகள் மூலமாக வருமானம் அதிகமாவதை ஓர் அரசாங்கம் சாதனையாகச் சொல்வது
கேவலமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் குற்ற நடவடிக்கைகள் பெருகிப்போய்,
பண்பாட்டுச் சீர்கேடுகள் அதிகமானதற்கு டாஸ்மாக் கடைகள்தான் காரணம்.
ஜெயலலிதாவும் கருணாநிதியும் சேர்ந்து தமிழ்ச் சமுதாயத்துக்குச் செய்த
பெருங்கேடு இது. இனி மதுக் கடைகளைப் புதிதாகத் திறக்கக் கூடாது; ஏற்கெனவே
உள்ள கடைகளைப் படிப்படியாக மூட வேண்டும். எலைட் பார் வரவே கூடாது.
தமிழ்நாட்டு ஆண்களின் கல்லீரலைக் கெடுத்த கழகங்கள் என்று வருங்கால சமுதாயம்
இவர்கள் இருவரையும் சபிக்கும்!''
''ஈழப் பிரச்னைக்கு வருவோம். மீண்டும் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) தொடங்கி உள்ளாரே கருணாநிதி?''
''கூச்சம் இல்லாமல் பொய்கள் சொல்வதும் வெட்கம் இல்லாமல் வேடிக்கை
காட்டுவதும் கலைஞர் கருணாநிதிக்குக் கைவந்த கலை. வசனம் எழுதி வாழ்க்கையைத்
தொடங்கியவர் அதே வசனங்கள் இன்னமும் கை கொடுக்கும் என்று நினைக்கிறார்.
80-களின் தொடக்கக் காலத்தில் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் எல்லாம்
'ஈழம்’ என்ற சொல்லை விதைத்த 'டெசோ’ அமைப்பின் கழுத்தை நெரித்துக் கொன்றவரே
கருணாநிதிதானே! 24 ஆண்டுகளுக்கு முன் அவராலேயே கொன்று புதைக்கப்பட்ட உடலை
மீட்டெடுத்து... பாடம் பண்ணி... படம் காட்ட வருகிறார். இது டெசோ அல்ல.
வெறும் ஷோ!
யாழ்க் கோட்டையில் புலிக் கொடி பறந்தபோது வேடிக்கை
பார்த்த அவர்... வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முக்கால்
நிலப் பரப்பில் நிர்வாகத்தைத் தமிழீழ அரசாங்கம் நிர்வகித்தபோது
கண்டுகொள்ளாமல் இருந்த அவர்... தரைப் படை, கப்பல் படை, விமானப் படை
மூன்றும் பிரபாகரனுக்கு இருந்தபோது வயிற்றெரிச்சல் பட்ட இவர்... ஆண்களுக்கு
இணையாகப் பெண்களும் களம் நின்ற காலத்தில் கண்டுகொள்ளாதவர்... உலகம்
பயன்படுத்தும் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்திப் போரிட்டு நின்ற காலத்தில்
அதை ஒரு பொருட்டாகக் கருதாதவர்... இன்றைக்குத் தமிழ் ஈழம் அமையப்
பாடுபடுவேன் என்று பேசுவது பச்சை சந்தர்ப்பவாதம். கருணாநிதிக்கு இது
இயல்பானது.
நான்காவது கட்ட ஈழப் போர் என்பது 2006-2009
காலகட்டத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷேவால் நடத்தப்பட்ட ரத்த வெறியாட்டம்.
இன்றைக்கு 'டெசோ’வை உயிர்த்தெழவைத்திருக்கும் கருணாநிதி, அன்று தமிழன்
சாகாமல் இருக்கச் செய்த காரியம் என்ன? தமிழ் ஈழத்துக்காகக் குரல்
கொடுத்தாரா? கருணாநிதிக்கு தைரியம் இருக்குமானால், நேர்மை இருக்குமானால்,
2008 நவம்பர் மாதம் முதல் ஆட்சியைவிட்டு இறங்கியது வரை ஈழப் பிரச்னை
குறித்து பேசியது, எழுதியது அனைத் தையும் பகிரங்கமாக வெளியிடட்டும்.
தமிழனுக்கு எதிராகப் பேசினார். தமிழீழக் கொள்கைக் குத் துரோகம் இழைத்தார்.
ஈழத் தமிழர்களின் காவல் அரணாக இருந்த விடுதலைப் புலிகளைப் பழித்தார்.
இலங்கை அரசோடு இணைந்து நாசகாரச் செயல்களுக்கு உடந்தையாக இருந்த மன்மோகன் -
சோனியா கூட்டத்துக்கு ஆதரவாக இருந்தார். இந்தப் பாவத்துக்கு கருணாநிதியால்
பரிகாரம் காணவே முடியாது.
தமிழர்கள், கருணாநிதியின் டெசோவை
சீரியஸாக எடுத்துக்கொள்ளவே இல்லை. அவர் ஆண்டுக்கு ஒரு முறை கதை வசனம்
எழுதும் படங்களைப் போலவே ஃப்ளாப் ஆகும் படங்களில் ஒன்று இது.''
''தி.மு.க-வில் ஸ்டாலின் - அழகிரி மோதல் தொடர்ந்து நடப்பதாகச் செய்திகள் வருகின்றனவே?''
''கொள்கைக் கட்சியில் விவாதங்கள் நடக்கும். குடும்பக் கட்சியில் கோஷ்டி மோதல்தானே நடக்கும்?
கருணாநிதியைப் போன்ற திறமையாளர்களைப் பார்ப்பது அரிது. அனைவரையும்
ஈர்க்கக்கூடிய பேச்சு, வசீகரம் செய்யக்கூடிய எழுத்து, யாருக்கும் வாய்க்காத
ஞாபக சக்தி, எவரையும் மடக்கும் சொற்சிலம்பம், ராஜதந்திரமாகக் காய்கள்
நகர்த்துவதில் லாகவம், உலகத் தமிழர்கள் ஒருசேர வைத்திருக்கும் நம்பிக்கை -
இத்தனையும் ஒருசேர இருந்தது கருணாநிதிக்கு. திறமையான அவருக்கு காலம் தங்கத்
தாம்பாளத்தில் தலைவர், முதல்வர் என இரண்டு பதவிகளையும் ஒருசேர வழங்கியது.
திறமையும் வாய்ப்பும் ஒருசேர ஒரு மனிதனுக்குக் கிடைத்தன. ஆனால், அத்தனை
திறமைகளையும் சுயநலம், குடும்பப் பாசம் என்ற இரண்டின் காலடியிலும்
கருணாநிதி கொண்டுபோய்ப் புதைத்துவிட்டதால் வரலாற்றின் முன் 'தமிழினக்
குற்றவாளி’ என்ற பதற்றத்துடன் அவமானமாகத் தலைகுனிந்து நிற்க வேண் டிய
நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். இதைப் பார்த்து நான் சந்தோஷப்படவில்லை.
பரிதாபப்படுகிறேன்.
எந்த இயக்கத்துக்காக என் இளமையின் பெரும்
பகுதியை உழைப்பாக வழங்கினேனோ... எந்தத் தலைவனுக்காக என் வாழ்க்கையை
அர்ப்பணித்து நின்றேனோ... அந்தத் தலைவன்... இப்படிப்பட்ட பழிச் சொல்லுக்கு
ஆளாகிவிட்டாரே என்ற கவலையிலேயே பேசுகிறேன்!''
''அ.தி.மு.க.,
தி.மு.க. இரண்டையும் முழுமையாக நிராகரிக்கிறீர்கள். ஆனால், தமிழகத்தை
இவர்கள் இருவரும் மட்டும்தானே மாறிமாறி ஆள முடிகிறது?''
''இரண்டு
கட்சிகளுக்குமே வலிமையான வாக்கு வங்கி தமிழகத்தில் இருக்கிறது. இதுவே ஆட்சி
அமைக்க சாதகமாக உள்ளது. அவர்களுக்கு இதுவே தைரியமும் கொடுக்கிறது. இந்த
முறை தோற்றால்... அடுத்த முறை வந்துவிடுவோம் என்ற தைரியத்தில்
இருக்கிறார்கள். இதனால் தவறை திருத்திக்கொள்ள முன்வருவது இல்லை.
இதைத் தமிழக மக்கள் உணர்ந்துவிட்டார்கள். தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய
இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கி வலிமை குறைந்துவருகிறது. புதிய, இளைய
வாக்காளர்கள் இந்த இரண்டு கட்சிகளையும் நிராகரிக்கும் மனோபாவத்துக்கு வந்து
உள்ளார்கள். மாற்றம் உடனடியாக வந்து விடும் என்று சொல்ல முடியாது. ஆனால்,
பல ஆண்டுகளுக்கு இது நீடிக்காது.''
''குறிப்பிட்ட அளவு செல்வாக்கு
இருந்த, உங்க ளுடைய சொந்தத் தொகுதியான சங்கரன்கோவில் கூட ம.தி.மு.க-வுக்கு
வெற்றி வாய்ப்பைத் தரவில்லையே?''
''எங்களை எதிர்த்து நின்ற
மூன்று கட்சிகளுமே வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தன. ஓட்டுக்கு ஒரு
பைசாவும் தர மாட்டோம் என்று சபதம் எடுத்து நாங்கள் நின்றோம். இத்தகைய
சூழ்நிலையில் 21 ஆயிரம் பேர் வாக்களித்ததே வெற்றிக்குச் சமம்தான்!''
''புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நிற்பீர்களா?''
''இல்லை. பகிரங்கமாகப் பண வேட்டை நடத்தும் ஆளும் கட்சியும், அதைக் கை
கட்டி வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையமும் இருக்கும் நாட்டில் இடைத்
தேர்தலில் போட்டி என்பது தவறான முடிவாகிவிடும். பணத்துக்கு ஓட்டை விற்பது
ஜனநாயகத்தில் விழுந்துள்ள ஓட்டை. இதை சங்கரன்கோவிலில் சரிசெய்ய
முடியவில்லை. புதுக்கோட்டை மக்களாவது பணத்துக்கு விற்கும் பாவத்துக்குப்
பலியாகிவிடக் கூடாது என்பதே என்னுடைய வேண்டுகோள்.''
- கை கூப்பி முடிக்கிறார் வைகோ
நன்றி :ஆனந்த விகடன்
Tuesday
ஒரு பெரிய மனிதரின் புதிய நாடகம்! வைகோ:
தமிழ் ஈழ முகமூடியை மறுபடியும் தாங்கி வலம் வரத் தொடங்கி விட்டார் கருணாநிதி. நேரத்துக்கும் ஆளுக்கும் தகுந்த மாதிரி வேடம் தாங்குவது அவருக்கு வழக்கமானதுதான். ஆனால், அதற்குத் தமிழ் இனத்தையும் தமிழ் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட உடல்களையும் பணயம் வைக்க அவர் முடிவு எடுத்திருப்பதுதான் வேதனையானது.
இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு ஈவு இரக்கம் இன்றி, தமிழ் இனப்படுகொலையை நடத்தியதற்கும், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளைப் போர்க்களத்தில் முறியடிப்பதற்கும், இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ராடார்களும், ஆயுதங்களும் தந்ததுதான் அடிப்படைக் காரணம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாயும் வழங்கி, இந்தியாவின் முப்படைத் தளபதிகளையும் அவ்வப்போது அனுப்பிவைத்து, சிங்களவன் நடத்திய இனக்கொலை யுத்தத்தை இயக்கியதற்கு அசைக்க முடியாத ஆதாரங்களும் சாட்சியங்களும் உள்ளன. இந்த மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்த இந்திய அரசின் அமைச்சரவையில் பங்கு ஏற்று உடந்தையாகச் செயல்பட்டார் கலைஞர் கருணாநிதி.
![]() |
| நடித்தே ஈழ தமிழர்கள் ஒரு லட்சம் பேரை கொன்ன கருணாநிதியின் நாடகத்தில் ஒரு பகுதி கால் பக்கம் மனைவியும் தலை பக்கம் துணைவியும் துணைக்கு இருக்கிறார்கள் |
'தமிழ் இனப்படுகொலைக்கு இவரும் ஒரு காரணம்’ என்று உலகத் தமிழர்கள் உள்ளங்களில் ஏற்பட்டுள்ள பழியில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவும், தடுமாறித் தத்தளிக்கும் தி.மு.கழகத்தின் தொண்டர்களை ஏமாற்றுவதற்காகவும், தமிழ் ஈழ விடுதலை முகமூடியை அணிந்துகொண்டு, தமிழர் தரணியில் இப்போது பவனி வரத் துடிக்கிறார்.
2004-ம் ஆண்டு, சோனியாவின் ஆளுமையில், டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தவுடன், இலங்கையோடு இந்தியா ராணுவ ஒப்பந்தம் செய்ய இருக்கிறது என்ற செய்திகள் வெளியானபோது, அதைத் தடுப்பதற்குக் கருணாநிதி, ஒரு துரும்பையாவது தூக்கிப் போட்டாரா? ஆட்சேபணை தெரிவித்தாரா? எடுத்ததற்கெல்லாம் கடிதங்கள் எழுதினேன் என்று பட்டியல் போடுகிறவர், இதுகுறித்து ஏதாவது ஒரு கடிதம் எழுதியதாகச் சொல்ல முடியுமா?
சிங்கள அரசுக்கு, இந்திய அரசு ராடார்கள் கொடுக்க இருக்கின்ற செய்தி வந்தபோது, அது தமிழர்களைக் குண்டு வீசிக் கொல்வதற்குத்தான் பயன்படும் என்று பதறித் தடுக்க முனைந்தாரா? 2007-ல் இந்தியா இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்தபோது, இவர் அதைக் கண்டித்தது உண்டா?
இந்திய அரசு, ஈழத் தமிழர்களை அழிக்க, சிங்கள அரசுக்குச் செய்து வந்த உதவிகளை, மேற்கொண்ட நடவடிக்கைகளை, எழுத்து மூலமாகக் குறிப்பிட்டு, இந்திய அரசைக் கண்டித்து, இந்தத் துரோகத்தைத் தமிழ் இனமும், வருங்காலத் தலைமுறையும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று எச்சரித்தும், பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை, நேரடியாகப் பலமுறை சந்தித்துத் தந்த கடிதங்களைத் தொகுத்து, குற்றம் சாட்டுகிறேன் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும், நூலாக நான் வெளியிட்டதற்காக என் மீது, கருணாநிதி அரசு தேசத்துரோக வழக்கைத்தானே பதிவு செய்தது.
தமிழ் ஈழம் என்ற உயிர் மூச்சான லட்சியத்துக்காக, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், 'ஈழத்தில் நடப்பது என்ன?’ என்று நான் பேசியதற்காக, அதே தேசத் துரோகக் குற்றச்சாட்டைத் தொடுத்து என்னைக் கைது செய்து புழல் மத்தியச் சிறையில் அடைத்தவர் அவர்.
1993-ம் ஆண்டு தி.மு.கழகத்தில் இருந்து என்னை நீக்க வேண்டும் என்று அவர் முடிவு எடுத்தபோது, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீதுதான் பழியைச் சுமத்தினார். எனது அரசியல் முன்னேற்றத்துக்காக, கலைஞர் கருணாநிதியை விடுதலைப் புலிகள் கொலை செய்யத் திட்டமிட்டார்கள் என்ற ஊர்ஜிதமாகாத, மத்திய அரசின் உளவுப்பிரிவுத் தகவலைக் குற்றச்சாட்டாக ஆக்கி, என்னைத் தி.மு.கழகத்தில் இருந்து நீக்கினார்.
விடுதலைப்புலிகள் மீது அல்லவோ அன்று கொடும் பழியைச் சுமத்தினார்?
எதற்கெடுத்தாலும், சகோதர யுத்தம்தான் ஈழத் தமிழர் வீழ்ச்சிக்குக் காரணம் என்று, ஒரு நாடக ஒப்பாரி வைக்கிறாரே, கோடிக்கணக்கான மக்கள் நெஞ்சில், அண்ணாவின் இயக்கத்தைச் சுடராக ஏற்றிய, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை இவர் சகித்தாரா? விளக்க அறிக்கைக்கான கெடு முடிவதற்கு உள்ளாகவே, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அல்லவா அவரை நீக்கச் செய்தார்?
கட்சியை, தலைமையை, உயிருக்கும் மேலாக நேசித்து, சர்வபரித் தியாகத்துக்கும் சித்தமாக இருந்த என் மீது கொலைப் பழி சுமத்தியபோது, அதை உண்மை என்று தொண்டர்கள் நம்பி இருந்தால் என்ன ஆகும்? 'எத்தகைய துன்பத்துக்கு அவன் ஆளாவான்? எத்தனைத் தலைமுறைகளுக்கு, அவனும் அவனது குடும்பமும் இந்தப் பழியைச் சுமக்க நேரும்?’ என்று கடுகு அளவேனும் கருதியது உண்டா? மனிதாபிமானமோ, மனிதநேயமோ, அவர் மனதில் நிழலாடியது உண்டா?
புரட்சி அமைப்புகளில் விடுதலை இயக்கங்களில் எதிர்ப் புரட்சியாளரை, ஊடுருவல் துரோகிகளை எப்படி நடத்தினார்கள் என்பதற்கு, சரிதத்தில் ஏராளமான சாட்சியங்கள் உண்டு. மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களின் உயிர் குடிக்கச் சதி செய்த மாத்தையாவை, மாவீரன் என்றும், கிழக்கு மாகாணத்தில் சிங்களவர் கைக்கூலியான கருணாவை, வீரத் தளபதி என்றும் இவர்களையெல்லாம் பிரபாகரன் அழித்துவிட்டார் என்றும் வசை பாடியது யார்? அதைவிடக் கொடுமை என்னவென்றால், 'லட்சியத்துக்காகப் போராடும் வேளையில், களத்தில் இறந்த வீரர்களுக்குக் கல்லறைகள், துயிலகங்கள், கட்டுவதில் சக்தியையும் நேரத்தையும் வீணாக்கினார்கள்’ என்று புலிகளை ஏகடியம் செய்தவர் யார்?
தமிழ் இனத்தின் ஒளி விளக்காம் பிரபாகரனைத் தன் மணிவயிற்றில் சுமந்த அன்னை பார்வதி அம்மையார், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறத் தமிழகம் வந்தபோது, தமிழ்நாட்டு மண்ணில் அவர் கால் எடுத்துவைக்கவும் அனுமதிக்காமல், வந்த விமானத்திலேயே, மேலும் நான்கு மணி நேரம் திரும்பிப் பயணிக்கின்றபோது, அந்தத் தாயின் உயிருக்கே ஆபத்து விளையக்கூடுமே என்ற அபாயத்தைப் பற்றியும் எள் அளவும் எண்ணிப் பார்க்காமல் விரட்டி அடித்த குற்றவாளி கலைஞர் கருணாநிதி.
உலகில் எங்கும் நடைபெற்று இராத இக்கொடுமையைக் கண்டித்து, இலங்கைத் தூதரகத்துக்கு முன்னால் போராட்டம் நடத்த முனைந்த என்னையும், அண்ணன் பழ.நெடுமாறன், விடுதலை இராசேந்திரன், ஆவடி மனோகரன், பாவலர் இராமச்சந்திரன், எம்.நடராசன் உள்ளிட்ட அனைவரையும், கைது செய்தது மட்டும் அல்ல, தனித்தனியாக நான்கு மத்தியச் சிறைகளுக்குப் பிரித்து அனுப்ப உத்தரவிட்டவரும் இந்தப் பெரிய மனிதர்தான்.
தமிழர் மனமெல்லாம் அணையாத சுடராக ஒளி வீசிக்கொண்டு இருக்கின்ற தியாக தீபங்களாம் முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர், ஈழத் தமிழரைக் காக்க, யுத்தத்தை நிறுத்த, இந்திய அரசின் துரோகத்தைத் தடுக்க, தீக்குளித்து மடிந்தபோது இவர் இரங்கல் தெரிவித்தது உண்டா? தனது மகன் பிறந்த நாளை, பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, பட்டுப் பீதாம்பரத்துடன் இவர் கொண்டாடிக்கொண்டு இருந்தபோது தியாகச்சுடர் முத்துக்குமாரின் உயிர் அற்ற சடலம், கொளத்தூரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் வீர வணக்கத்தை ஏற்றுக்கொண்டு இருந்தது. ஈழத் தமிழருக்காகப் பள்ளப்பட்டி ரவி தீக்குளித்தபோது, 'குடும்பச் சண்டையால் செத்தான்’ என்று கொச்சைப்படுத்தி அறிக்கை வெளியிட வைத்தவரும் இவர்தான். ஈழத் தமிழர்க்காகப் போராடிய வழக்கறிஞர்களுக்கு எதிராக லத்தியைத் தூக்கியதும் இவரே.
சென்னைக் கடற்கரையில், அண்ணா சதுக்கத்தில் சாக முடிவு எடுத்து உண்ணாவிரதம் இருந்தேன் என்று, எந்தக் கூச்சமும் இல்லாமல் இன்றைக்கு எழுதுகிறார்.
முதல் நாள் இரவு, வெளிநாடுகளில் இருந்து வந்த தொலைபேசிகளில், ஈழத் தமிழர்கள் பதற்றத்தோடு, விம்மலும், புலம்பலுமாக, ''நாளை மாலைக்குள் தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிரை முடித்துவிடுவார்கள் என்று செய்தி வருகிறதே? தமிழ்நாடு முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதியிடமும் இதுபற்றி நாங்கள் முறையிட்டு உள்ளோம்'' என்று என்னிடம் சொன்னார்கள். அப்படி ஒன்று நடந்தால், பழிக்கும் வெறுப்புக்கும் தானும் ஆளாக நேரும் என்று கருதித்தான் இவர் கடற்கரை உண்ணாவிரத நாடகத்தைப் போட்டார்.
ஆனால், தில்லி ஜன்பத் சாலை, 10-ம் எண் வீட்டில் இருந்து, மிரட்டல் தொனியில் எதிர்ப்பு முக்கிய நபர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டதால், உண்ணாவிரதத்தை மூன்று மணி நேரத்திலேயே முடித்துக்கொண்டு, மதிய உணவுக்கு வீட்டுக்குப் போய்விட்டார். இவரது சாகும் வரை உண்ணாவிரதம் அன்று சந்தி சிரித்தது.
'இனி பலத்த தாக்குதல் எதுவும் நடக்காது’ என்று கருணாநிதி சொன்னதால், அன்று மாலையில் பதுங்கு குழிகளில் இருந்து தமிழர்கள் வெளியே வந்தார்கள். அவர்கள் மீதும் ராஜபக்ஷே குண்டு வீசினான்.
அதுபற்றிக் கேட்டதற்கு, 'மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்று அலட்சியமாகச் சொன்னவர் கருணாநிதி.
தமிழகத்திலும், தரணியெங்கும் தமிழர்கள் வேதனையில் துடித்தபோது, 'இலங்கைத் தமிழர் பிரச்னையில், மத்திய அரசின் கொள்கைதான் என் கொள்கை’ என்று திட்டவட்டமாக அல்லவோ சொன்னார்? அப்படியானால், இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தில், நடத்தப்பட்ட இனப் படுகொலையிலும், தானும் கூட்டுக் குற்றவாளி என்பதுதானே இவரது ஒப்புதல் வாக்குமூலம். 'ராஜபக்சேவை விமர்சிப்பது, அவருக்கு ஆத்திரத்தை மூட்டிவிடும். அதனால், தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடும். எனவே, அவரைக் குறை சொல்லக் கூடாது’ என்று கீதோபதேசம் செய்தவர்.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்குப் பொருளாதாரத் தடை விரித்தபோது, அதை உடைப்பதற்காக டெல்லிக்கு வந்தார் ராஜபக்சே. அவருக்கு, இவர் முட்டுக்கொடுக்கும் மத்திய அரசுதான் கோலாகல வரவேற்புக் கொடுத்தது. அதை கருணாநிதி விமர்சித்தது உண்டா? திருப்பதி கோயிலில் கொலைகாரன் ராஜபக்சேவை வரவேற்றுப் பூரண கும்ப மரியாதை செய்ததை, இவர் விமர்சித்தது உண்டா?
2008-ம் ஆண்டில், ஈழத் தமிழ் இளைஞர்கள் எட்டுப் பேரை, அம்மணமாக்கி கண்களைக் கட்டி, கைகளைப் பின்புறமாகக் கட்டி, மிருகங்களான சிங்களச் சிப்பாய்கள் காலால் எட்டி மிதித்து, மண்டியிடச் செய்து, பிடறியில் சுட்டு, ரத்த வெள்ளத்தில் அவர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை, லண்டனின் சேனல் 4 தொலைக்காட்சி, ஆவணப் படமாகவே வெளியிட்டது. அதைக் கண்டு, அகிலமே அதிர்ச்சியுற்றது. ஆனால், இது போலிப் படம் என்று சொன்னார்கள் இருவர். ஒருவர், மகிந்த ராஜபக்சே. ''இது ஏதோ பழைய படம் போலத் தெரிகிறது'' என்று ஏளனமாகப் பரிகசித்தவர் கலைஞர் கருணாநிதி.
ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் பான் கி மூன், மார்சுகி தாருஸ்மன் தலைமையில் மூவர் குழுவை அமைத்தார். அந்த மூவர் குழு, இலங்கைத் தீவில், தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை, இதயத்தைப் பிளக்கும் வகையில் ஆதாரங்களோடு அறிக்கையாகத் தந்தார்களே. அந்த அறிக்கையைப் படிக்கும்போதே நெஞ்சம் நடுங்கும், கண்ணீர் கொட்டுமே. பக்கம் பக்கமாக எதற்கெல்லாமோ அறிக்கைகளும் மடல்களும் தீட்டுகின்ற கலைஞர் கருணாநிதி, இந்த மூவர் குழு அறிக்கையைப் பற்றி இதுவரை ஏதாவது எழுதியது உண்டா? கிடையாது.
ஈழத் தமிழ் இனத்தைக் கருஅறுக்க, சிங்களவனுக்கு இந்திய அரசு செய்த உதவிக்கு, முழுக்க முழுக்கத் துணையாக இருந்து, தமிழகம் கொந்தளித்து எழாமல் தடுக்கின்ற மாய்மால வேலைகள் செய்து, அவ்வப்போது நீலிக்கண்ணீர் அறிக்கைகளையும் வழங்கி ஏமாற்றியதைத் தவிர இவர், இதுவரை உருப்படியாக எதையும் செய்யவில்லை.
தந்தை செல்வா வெற்றி பெற்ற காங்கேசன் துறை இடைத்தேர்தல், 1975-ல் சுதந்திரத் தமிழ் ஈழத்துக்குக் கட்டியம் கூறிற்று. 1976 மே 16-ல், வட்டுக்கோட்டை பண்ணாகத்தில், தந்தை செல்வா தலைமையில், தமிழர் அமைப்புகள் கூடி, சுதந்திரத் தமிழ் ஈழப் பிரகடனம் செய்தன. ''இனி, இளந்தலைமுறை இதை முன்னெடுத்துச் செல்லட்டும்'' என்றார் தந்தை செல்வா. ஈவு இரக்கம் அற்ற கொலை வெறியுடன், தமிழ் இனத்தை அழிக்க முப்படைத் தாக்குதல் நடத்திய சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்து, பிரபாகரன், ஆயுதம் தாங்கிய போர் நடத்தினார். உலகம் இதுவரை கண்டும் கேட்டுமிராத வீர சாகசங்களை, யுத்தக் களத்தில் செய்து, வெற்றி மேல் வெற்றியும் குவித்தார்.
ஓர் அரசுக்கான அனைத்துத் துறைகளையும் அமைத்தார். தரைப் படை, கடற் படை, வான் படை நிறுவினார். மலரும் தமிழ் ஈழத்துக்கு இனி உலகம் ஒப்புதல் அளிக்க வேண்டிய சூழலில்தான், இந்தியா முழு ஆயுதப் பலத்தையும் தந்து, பல வல்லரசுகளின் ஆயுத உதவிகளையும் சிங்களவன் பெறுவதற்கு உடன்பட்டு, யுத்தக் களத்தில் விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவையும் சரிவையும் ஏற்படுத்தியது.
'இந்த யுத்தத்தை நடத்தியதும் இயக்கியதும் இந்திய அரசுதான்’ என்று, இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகச் சொன்னார் ராஜபக்சே. அவரது அமைச்சர்களும் சொன்னார்கள். இதைக் கருணாநிதியால் மறுக்க முடியுமா?
கடந்த ஆண்டு ஜூன் 1-ம் நாள், பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்சில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற அரங்கத்தில், ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்னை மாநாட்டில் நான் உரையாற்றியபோது, அந்த அமர்வில் அதிக நேரம் எனக்கு ஒதுக்கப்பட்டது. ஈழப்பிரச்னைக்கு ஒரே ஒரு தீர்வு. அதுதான், சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் என்றேன்.
தமிழர் தாயகமான, தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்து, சிங்கள ராணுவமும், போலீஸும் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும். சிங்களக் குடியேற்றங்கள் அடியோடு அகற்றப்பட வேண்டும். சிறையில் உள்ள தமிழர்களை விடுவிக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக சுதந்திரத் தமிழ் ஈழம் அமைக்க, தமிழர் தாயகத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதில் உலகத்தின் பல நாடுகளில் வாழுகின்ற ஈழத் தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே பொது வாக்கெடுப்பில் பங்கேற்க ஐ.நா.மன்றமும், அனைத்துலக நாடுகளும் தக்க வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். பொது வாக்கெடுப்பு என்பதையும், உலகம் முழுவதையும் பல நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் அதில் பங்கேற்க வழி செய்ய வேண்டும் என்பதையும், ஈழத் தமிழர் பிரச்னையில் நான் முதன்முதலாகப் பதிவு செய்தேன்.
இப்படி நான் முன்வைத்த கருத்தை, உலகெங்கும் உள்ள தமிழ் ஈழச் சொந்தங்கள், எல்லையற்ற மகிழ்ச்சியோடு வரவேற்று மனதாரப் பாராட்டியதோடு, ''இதுதான் நமது இலக்கு, இந்த இலக்கை நோக்கி முன்னெடுத்துச் செல்வோம்'' என்றனர். என் வாழ்நாளில், மன நிறைவாக ஆற்றிய கடமைகளுள் இதுவும் ஒன்று என எண்ணி, அந்த இரவில் நான் நிம்மதியுற்றேன். ஆனால், திடீரென்று கலைஞர் கருணாநிதி, பொதுவாக்கெடுப்பு, சுதந்திரத் தமிழ் ஈழம் என்கிறார். இவரது மாய்மாலத்தை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்.
தமிழர்கள் சிந்திய செங்குருதியும், தரப்பட்ட உயிர்ப் பலிகளும், தமிழ் இனத்துக்கு எவரெல்லாம் துரோகம் இழைத்தார்களோ, அவர்களுக்குச் சவுக்கடி கொடுத்துக் கொண்டே இருக்கும். தமிழர்களின் மறதியை முதலீடாக நினைத்து கருணாநிதி தனது புதிய அறுவடையைத் தொடங்குகிறார். அதை முளையிலேயே முறிக்க வேண்டும்!
கொடுந்துயரில் தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு உரிமை வாழ்வு கிடைக்க... சுதந்திரத் தமிழ் ஈழம் மலரட்டும்!
Wednesday
சங்கரன் கோயில் சவால் 26 அமைச்சர்களுக்கு போட்டியாக 38!
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
இடைதேர்தல்,
தமிழகம்,
மதிமுக
எழுதிய நேரம்
Wednesday, February 15, 2012
சங்கரன்கோவிலுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கடந்த 10-ம் தேதி சென்னையில் கூடியது, ம.தி.மு.க. பொதுக் குழு. கட்சியின் இணையதள நண்பர்கள் 100 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தார்கள். கூட்டம் நிரம்பி வழிந்ததால், அனைவரிடமும் உற்சாகம் பொங்கி வழிந்தது.
கட்சியின் பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து தேர்தல் நிதியளிப்பைத் தொடங்கி வைத்தார். உடனே, பலரும் மேடையை நோக்கி முண்டியடித்தனர். அப்போது, மைக் பிடித்த திருச்சி ஷேக்முகமது, ''என்னுடைய நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒரு நாளைக்கு இரு முறை டயாலிசிஸ் செய்தாக வேண்டும். இதற்காக மட்டும் தினமும் 10 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. நம் இயக்கத்துக்கு இது நெருக்கடியான காலம் என்பதால், எல்லோரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும்'' என்று சொல்லி இரண்டு லட்சம் நிதி கொடுக்க... திடீரெனக் கூட்டம் விக்கித்து நின்றது. அதைத் தொடர்ந்து பொதுக்குழுவில் மொத்தம் 46.75 லட்ச ரூபாய் தேர்தல் நிதியாக சேர்ந்தது.
செந்திலதிபன் பேசியபோது, ''ஓர் ஆண்டுக்கு முன்பு நடந்த 19-வது பொதுக் குழுக் கூட்டம், மிகவும் இறுக்கமாக இருந்தது. கூட்டணியில் நம்முடைய கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்கிற கேள்வி எல்லார் மனதிலும் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால், நாம் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஆனது. ஆனால், தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடி இருக்கிறோம். கடலூர் சேதத்தைப் பார்வையிடப் போனபோது வைகோவிடம் நிறையப் பேர், அவரை எம்.பி-யாகவே நினைத்துக்கொண்டு, 'நாடாளுமன்றத்தில் எங்கள் பிரச்னையை எடுத்துச் சொல்லுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்கள். இந்த நம்பிக்கைதான் நமக்குக் கிடைத்துள்ள வலிமை'' என்று குறிப்பிட்டார்.
அடுத்துப் பேசிய மல்லை சத்யா, ''காகத்துக்குப் பகலில் வலிமை, ஆந்தைக்கு இரவில் வலிமை. நிலத்தில் யானைக்கு வலிமை. நீரில் முதலைக்கு வலிமை. சங்கரன்கோவில் இடைத்தேர்தல், நம்மை வஞ்சித்தவர்களை வீழ்த்துவதற்கான ஒரு வாய்ப்பு. போட்டியாளர்களை வீழ்த்திக்காட்டும் வலிமை நம்மிடம் இருக்கிறது. அதைக் களத்தில் காட்டுவோம்'' என்று சூளுரைத்தார்.
நாஞ்சில் சம்பத் காரசாரமாகவே பேசினார். ''18 ஆண்டு கால ம.தி.மு.க. வரலாற்றில், ஒரு முக்கியமான கட்டத்தை இப்போதுதான் கடக்கப்போகிறோம். வருகிற நாட்கள் நமக்கான வசந்தகாலம். கவிஞர் தாமஸ் கிரே சொன்னதுபோல, 'சந்தர்ப்பங்கள் கிடைக்காவிட்டால், எந்த மனிதனும் சரித்திரம் படைக்க முடியாது’. அந்த சந்தர்ப்பம், நமக்கு இப்போது வாய்த்துள்ளது. மக்கள் இப்போது, வைகோ மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா நாடகம் முடிவுக்கு வருகிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலைச் சந்திக்க 26 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து இருக்கிறார் ஜெயலலிதா. இதன்மூலம், வைகோவின் வெற்றியை ஜெயலலிதா ஒப்புக்கொண்டு விட்டார்'' என்று பேசியவர், திடீரென டிராக் மாறி, ''சிலர் இருட்டடிப்பு செய்வதால், நம்மைத் தோற்கடித்துவிட முடியாது. என் மனைவியின் தாலிக்கொடியை விற்றுப் பணம் தருகிறேன். தலைவா, நீ நமக்கெனத் தனித் தொலைக்காட்சி தொடங்கு'' என்று ஆக்ரோஷத்தோடு சொல்ல, அத்தனை பேரும் கைதட்டி வரவேற்றனர். மேடையில் இருந்த 'இமயம்’ ஜெபராஜ் மட்டும் நெளிந்தார்.
இரவு 7 மணிக்குப் பேசவந்த வைகோ, ''நம் மீது மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. ஏழைத் தாய்மார்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். புதிய இளைஞர்கள் தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்றாக ம.தி.மு.க-வை மக்கள் நினைக்கிறார்கள். மத்திய அரசு தமிழகத்தை, தமிழர்களை வஞ்சித்து வருகிறது. தமிழினத்துக்கு எதிரான மத்திய அரசின் துரோகத்தில் தி.மு.க-வுக்கும் பங்கு உண்டு. அதே சமயம், எட்டு மாத கால அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் படும் வேதனைகளும் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. பால் விலை, பஸ் கட்டணம் எல்லாம் விஷம் போல ஏறிக்கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், அ.தி.மு.க-வுக்குத்தான் வெற்றி என்று சொல்லும் ஜெயலலிதா, வரட்டும் சங்கரன்கோவிலுக்கு! இந்தத் தொகுதியின் மூலை, முடுக்கெல்லாம் நமக்கு அத்துப்படி. இப்போதே அதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தொடங்கி விட்டார்கள். ஜெயலலிதாவின் ராசி எண் ஏழு வரும்படியாக, 34 பேர் கொண்ட அ.தி.மு.க. தேர்தல் குழு, 7-ம் தேதி கூட்டம் போடுகிறார்கள். 7-வது வார்டில் 7 நிமிடங்கள் வாக்கு கேட்டார்கள். தலைமைச் செயலகத்தை காலி செய்தது போல 26 அமைச்சர்களை வைத்து உருட்டி மிரட்டி விடலாம் என்று நினைக்கிறார். இவர்கள், திருமங்கலம் இடைத்தேர்தலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடியவர்கள். காசு பணம் கொடுத்து ஓட்டு வாங்க முயற்சித்தால், நானே களத்தில் நிற்பேன். திருச்செந்தூர் இடைத்தேர்தல் நடந்தபோது, எம்ஜிஆரின் மந்திரிகளையே கண்ணில் விரலைவிட்டு ஆட்டியவன் நான். அமைதியான முறையில் நியாயமாக வாக்கு கேட்போம். வன்முறை நிகழ்த்தப்பட்டால், உரிய பதிலடி கொடுப்போம். அதற்கான வியூகங்களை இப்போது வெளியில் சொல்ல முடியாது'' என்று சஸ்பென்ஸ் வைத்து, உரையை முடித்தார் வைகோ.
வைகோவின் ஏரியா என்பதால், ம.தி.மு.க-வுக்கு இந்தத் தேர்தல் மானப்பிரச்னை. அதனால், கட்சியின் 38 மாவட்ட அமைப்புகளுக்கும் பகுதி பகுதியாகப் பொறுப்பைப் பிரித்து, செயல் திட்டத்தோடு காத்திருக் கிறார்கள்.
அனல் பறக்கப்போகிறது!
நன்றி :ஜூனியர் விகடன்
Saturday
மாற்று அணிக்கான துவக்கம் திருப்பூரில் இருந்து நேரடி ஒளிபரப்பு
மாற்று அணிக்கான துவக்கத்தை தமிழருவிமணியன் துவங்கியிருக்கிறார் . இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் தோழர் நல்ல கண்ணு , மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் தோழர் ராம கிருஷ்ணன் , வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர் . இப்போது வைகோ பேசி கொண்டிருக்கிறார் .
நேரடி ஒளிபரப்பை காண
நேரடி ஒளிபரப்பை காண
Watch live streaming video from tamil24news at livestream.com
Subscribe to:
Posts (Atom)













